வட்டக்கச்சி ஒரு விவசாய கிராமம்!

வட்டக்கச்சி (Vaddakkachchi) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வேளாண்மைக் கிராமம் ஆகும். கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 கிராமசேவையாளர் பிரிவுகள் “வட்டக்கச்சி” பிரதேசத்தில் உள்ளடக்கப்படுகின்றன.

இலங்கை அரசின் 1948 ஆண்டு சட்டக்கோவையின் 464 ஆம் அத்தியாயமான காணி அபிவிருத்திக் கட்டளை சட்டத்தின் 19(2)ஆம் பிரிவின் கீழ் வட்டக்கச்சி பிரதேசத்தின் நிலப்பரப்பு (மேட்டுநிலம், வயல்நிலம்) ஒழுங்குபடுத்தப்பட்டு 1952 ஆம் ஆண்டளவில் ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் மேட்டுநிலம், 3 ஏக்கர் வயல் நிலம் என நிலப்பகிர்வு செய்து அளிக்கப்பட்டதுடன் 1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் படியும், 1981ஆம் ஆண்டின் 27 இலக்க திருத்தப்பட்டவாறான சட்டபிரிவின் மூலமாகவும் காணி பயன்பாடு அனுமதிப்பத்திரங்களும் (Permit), உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அமைவிடம்: இலங்கையின் மத்திய நகரமான கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைப்பது ஏ-9 நெடுஞ்சாலை. இலங்கையை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாகவும்,அமைப்பு ரீதியாகவும் இன் நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகர் கிளிநொச்சி ஆகும். இந்நகருக்கு கிழக்கே 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் வட்டக்கச்சி ஆகும். இது வடக்கே பத்துவீடு, கிழக்கே இராமநாதபுரம், தெற்கே இரனைமடு மேற்கே திருவையாறு போன்ற கிராமங்களை கொண்டுள்ளது.

பௌதீக வளங்கள் தரைத்தோற்ற அமைப்பு: இப்பிரதேசத்தின் தரைத்தோற்றமானது விவசாயம் (பயிர்ச்செய்கை, கால்நடை) ,கைத்தொழில், போக்குவரத்து, போன்றவற்றுக்கு ஏதுவான சமவெளியாக காணப்படுகின்றது.

நீர்வளம்: இப்பிரதேசத்தின் அபிவிருத்தி,பொருளாதாரததை தீர்மானிக்கும் முக்கியமானதொரு வளமாக நீர் வளம் காணப்படுகிறது. இக்கிராமத்தின் மேற்கே கனகராயன் ஆற்றின் கிளையாறு ஓடுகின்றது, மற்றும் தரைக்கீழ் நீர் வருடம் முழுவதும் கிடைக்கின்றது.

மண்வளம்: இங்கு நெற்செய்கைக்கு ஏற்ற களிமண் மற்றும் இருவாட்டிமண்ணும் பரவலாக காணப்படுகின்றது. இவை விவசாய செய்கைக்கு மிகவும் பங்களிக்கின்றன. இங்கு களிமண், இருவாட்டிமண். சேம்பாட்டுமண், கபிலநிறமண் மற்றும் மணல்மண் போன்றவற்றை காணக்கூடியதாக இருக்கும்.

கல்வி: இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் வேளாண்மையாக இருந்தபோதிலும் அனைவருமே கல்விகற்பதில் ஆர்வமும், அறிவுத்தேடலும் உடையவர்களாவர். மாவட்ட ரீதியில் வெளிவரும் புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கும் போது இப்பிரதேச மாணவர்களே அரச பொதுப்பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கல்வியில் மாவட்ட, மாகாண, தேசிய மட்ட ரீதியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டடுள்ளன. அத்தோடு உயர் பதவிகளிலும் இருக்கின்றனர்.

wikipedia.org